2004 நவம்பரில் ksrk எனது தம்பி மூலமாக எனக்கு அறிமுகம், அவர் எழுத்தாளரும்கூட என்று அறிமுகம் செய்தான். சில வருடங்கள் கழித்து அவருடைய வலைப்பதிவுகள் / கதைகள் படித்தேன். அவருடைய வெப்ஸைட்டில் அவரின் டிவிட்டர் ஐடியைப் பார்த்து சரி நாமும் ட்விட்டரில் ஒரு கணக்குத் தொடங்குவோம் எனத்தொடங்கி பின்தொடர்ந்தேன்.
பின் ட்விட்டர் ரெகமெண்ட் செய்ய @elavasam கொத்தனாரைப் பின்தொடர்ந்தேன். அவர் ட்விட்டுகள் ஜாலியா இருந்தது. பின் அவர் ஜாலியா தமிழ் இலக்கணம்னு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்று தெரியவந்தது. பள்ளியில் தமிழ் பாடத்தில் பல சமயம் க்ளாஸ் ஃபர்ஸ்ட் எடுத்துள்ளேன், புலவர் மன்றத்தேர்வில் பள்ளியில் முதலாக வந்து பரிசெல்லாம் வாங்கியுள்ளேன். பள்ளிப்படிப்பு முடிந்ததும் 1991னோட தமிழ் இலக்கணம், இலக்கியம் எல்லாம் விட்டுப்போய் மறந்துபோச்சு. பதினெட்டு வருசம் கழித்து தமிழ் இலக்கணம் அதுவும் ஜாலியா கத்துக்கலாம்னு சொல்லுறாரேன்னு ஒரு ஆர்வம் வந்துடுச்சி, ஆனால் எப்படி அந்த புத்தகத்தை வாங்குறதுன்னு தெரியல. அப்ப நியூஜெர்சியிலுள்ள ஒரு கோயில்ல ட்விட்டர் சந்திப்பு நடக்குதுன்னு தெரியவந்தது, அங்க கொத்தனாரை சந்திச்சு அந்த புத்தகத்தை வாங்கலாம்னு போனேன், என்ன காரணமோ அவர் அங்கு வரல. சிலமாதங்கள் ஓடிற்று அதற்குமேல் காத்திருக்க முடியலை. ஒருநாள் டிஎம் அனுப்பினேன், வரச்சொன்னார், போனேன்..
நீங்க நல்லா போட்டோ புடிக்கிறீங்கன்னு அவர் சொல்ல.. நீங்களும் நல்லா ஜாலியா எழுதுறீங்கன்னு நான் சொல்ல.. அப்புறம் அவர் கேட்டார் சமீபத்தைய எழுத்தாளர்களில் யார் உங்க பேவரைட்? ஜெயமோகன் தெரியுமா???
இல்லைங்க எனக்கு ஜெயமோகனெல்லாம் யாருன்னே தெரியாதுங்க. கதைகள், நாவலெல்லாம் படிக்கிற பழக்கமில்லை. அப்பப்ப விகடன், குமுதத்தில் சிறுகதைகள் படிப்பேன். அதை விமர்சிக்கும் அளவிற்கெல்லாம் எனக்கு தமிழ் தெரியாது.. மேலும் எழுத்தாளர், எழுத்து, நடை இதெல்லாம் எனக்கு என்னன்னு தெரியாதுன்னு சொல்லிட்டு, சரி சமீபத்துலன்னு சொல்லனும்னா எழுத்தாளர்களில் ஞாநி தெரியும், விகடனில் அவர் எழுதிய ஓ..பக்கம் தொடர்ந்து படித்திருக்கிறேன் என்றேன்.
ஓ.. உங்களுக்கு ஞாநியின் எழுத்துகள் தெரியுமா..? அவர் இங்க வந்திருந்தப்ப எங்க வீட்டுலதான் தங்கியிருந்தார், இங்க வந்த அனுபவத்தை ஆப்பிள்தேசம் என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார் என்றார். சரியென்று ஜாலியா தமிழ் இலக்கணம் புத்தகத்தை வாங்கிக்கொண்டு விடைபெற்று வீடுதிரும்பினேன். வீடுதிரும்பியதும் ஆப்பிள்தேசத்தை வலையில் தேடி ஒரேமூச்சில் படித்துமுடித்தேன். அருகில் ஜாலியா தமிழ் இலக்கண புத்தக அட்டைப்பெண் போர்டில் எழுதியபடி என்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஞாயிறு ஞாநியின் மறைவு செய்தியை அறிந்ததும் இச்சம்பவம்தான் எனக்கு ஞாபகம் வந்தது, கொஞ்சம் லேட்டுதான்.. ஆனால் இப்பதான் நேரம் கிடைத்தது.
Comments
Post a Comment