சில சமயங்களில் என்னடா இது நிலையற்ற வாழ்க்கை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கையில் , இந்த நிலையற்ற வாழ்க்கை எங்கேயிருந்து ஆரம்பமானது என்று நினைவலைகள் ஓடியது.... என் நினைவுக்குத் தெரிந்த எங்கள் முதல் இடமாற்றம் விருத்தாசலத்திற்கு, நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது - திருச்சியிலிருந்து இடமாறினோம். கல்வி ஆண்டின் நடுவில் இந்த மாற்றம் வந்ததால், அப்பா முதலில் அங்கு சென்று அலுவலகத்திலேயே தங்கியிருந்து, நல்ல பள்ளிகள் இருக்கிறதா, இடையில் சேர்த்துக்கொள்வார்களா? என்று அறிய அங்கு சென்றார்கள். அப்பா ஒரு வேளாண்மை அதிகாரி - அரசு அலுவலர். பாத்திமா ஆங்கில பள்ளியில் உடனே சேரச்சொன்னதால், ஒரு ஜனவரி மாதத்தில் சேர்ந்தோம் - நான் 4ம் வகுப்பு என் தம்பி 2ம் வகுப்பு- ஆனால் உடனே வாடகைக்குவீடு கிடைக்கவில்லை, அதனால் சில நாட்கள் டாக்டர் தாத்தா(எங்க தாத்தாவின் மூன்றாவது தம்பி ) வீட்டில் தங்கியிருந்தோம், பிறகு திரு வி.க. நகரில் ஒரு வீட்டில் குடியேறினோம், அதன் பிறகு அந்த வீடு மிகத் தொலைவில் இருந்ததால் சில மாதங்களில் நவமணி நாடார் காலனியில் குடியேறினோம். 2 வருடங்கள் கழித்து அப்பாவிற்கு பண்ருட்டிக